கட்சியை பதிவு செய்வது தொடர்பாக வழக்கறிஞர் குழுவுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதால், அவர் சற்று அமைதியாக இருந்தார். 

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மாவட்ட தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம், அவர் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார். 

அதன் படி, வரும் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பை முறையாக வெளியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

மேலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராகத் தமிழருவி மணியனையும் நடிகர் ரஜினிகாந்த் நியமித்து உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, நேற்று பெங்களூருவில் தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த், ஆசி பெற்றார். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் திடீரென்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

புதிதாக தொடங்கவிருக்கும் கட்சிப் பணிகள் குறித்து அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், “தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரன் ஆகியோரின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது” என, ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, கட்சியை பதிவு செய்வது தொடர்பாக வழக்கறிஞர் குழுவுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் ரஜினி இல்லத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு தற்போது போடப்பட்டுள்ளது. அந்த பகுதியாக செல்வோர்கள் போலீசாரின் சோதனையைக் கடந்தே செல்ல வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

நேற்று முன் தினம் நடிகர் ரஜினி இல்லத்திற்கு அதிக அளவிலான தொண்டர்கள் வந்து செல்வதால், அவரே தனது வீடு அமைந்துள்ள பகுதிகளில் சொந்த செலவில் சிசிடிவி கேமாராக்களை அமைத்துள்ளார் என்றும் செய்திகள் வெளியானது.

இதனிடையே, வரும் 31 ஆம் தேதி கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்க உள்ள நிலையில் ரஜினிகாந்த் திடீரென்று இன்று ஆலோசனை மேற்கொண்டு வருவது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.