இளம் பெண்ணை ஆபாசமாக பேசி “மோசமான காரியம்” செய்த போதை காவலரை, பொதுமக்கள் செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் ராஜு என்ற காவலர், நேற்று முன் தினம் ஞாயிற்றுக் கிழமை இரவு நேரத்தில், பணி முடித்து விட்டு போதையில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது, சென்னை வடபழனியில் அமைந்துள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் இளம் பெண் ஒருவர், வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு செல்வதற்காகப் பேருந்துக்காக காத்து நின்றுள்ளார். 

அந்த இளம் பெண்ணை பார்த்து சற்று சபலப்பட்ட அந்த தலைமை காவலர், அந்த இளம் பெண்ணின் அருகே சென்று அவரிடம் ஆபாசமாகப் பேசியதாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால், கடும் கோபம் அடைந்த அந்த தலைமைக் காவலராக ராஜு, அந்த இளம் பெண்ணின் கன்னத்தில் அடித்து உள்ளார். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் அலறி துடித்து சத்தம் போட்டு உதவிக்கு அங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்களை அழைத்து உள்ளார். இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அந்த பெண்ணை அந்த காவலரிடம் இருந்து மீட்டு உள்ளனர். 

அதன் பின்னர், அந்த காவலரை பொது மக்கள் சரமாரியாக அடித்து தாக்கி உள்ளனர். மேலும், அங்கு நின்றுகொண்டிருந்த சில பெண்கள், தாங்கள் அணிந்திருந்த செருப்புகளால், அந்த காவலரைத் தாக்கி உள்ளனர். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த சில பொது மக்கள், அந்த தாக்குதல் காட்சியை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். 

அதன் தொடர்ச்சியாக, சம்மந்தப்பட்ட அந்த காவலரை வடபழனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொதுமக்கள், அங்கு இருந்த போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், “அவர் கே. கே நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் ராஜு என்பது தெரிய வந்தது. அங்கும், சக பெண் காவலர்களிடமும் அந்த பகுதியில் இருக்கும் பொது மக்களிடமும் அவர் சம்பந்தமில்லாமல் தகராறில் ஈடுபட்டு வந்ததால் ஏற்கனவே தண்டனையாகத் தான், எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்” என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் தலைமை காவலர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க வடபழனி காவல் நிலைய போலீசாருக்கு சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இதனால், “இளம் பெண்ணை தாக்குதல், ஆபாசமாகப் பேசுதல், பெண் வன்கொடுமைத் தடுப்பு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவலர் ராஜு, கைது செய்யப்பட்டார்.

முக்கியமாக, இளம் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட தலைமை காவலர் ராஜுவை சஸ்பெண் செய்யச் சொல்லி, காவல் ஆணையர் அதிரடியாக உத்தரவும் பிறப்பித்து உள்ளார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, சென்னை வடபழனியில் மது போதையில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலரை பொதுமக்கள் செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.