“உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம்” நடப்பதாக கூறிய நடிகர் சூர்யாவின் கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதால், அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதி உள்ளார்.

பல்வேறு சர்சைகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் நடந்து முடிந்திக்கிறது நீட் தேர்வு. ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு அச்சத்தால், தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக தமிகழத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர் நடிகைகளும் தங்களது ஆதங்கத்தையும், கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

அதன்படி, நடிகர் சூர்யாவும் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் இங்கே ஏதுமில்லை. கொரோனா வைரஸ் தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனையாக இருக்கிறது. 

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத் தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து, காணொலியின் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று சுட்டிக்காட்டி இருந்தார்.

“தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள். அனல் பறக்க விவாதிப்பார்கள். நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.

அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது, வாழ் நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்வி முறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று, வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். 

மேலும், “நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்த துணை நிற்பது போலவே ஆகும். மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்த வேண்டும். அன்பு நிறைந்த குடும்பம், உறவு, நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு, தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது மிக முக்கியம்.

மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் 6 ஆம் வகுப்பு குழந்தைகூட தேர்வு எழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.

ஒரே நாளில் நீட் தேர்வு 3 மாணவர்களைக் கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும். நாம் விழிப்புணர்வுடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கக் கூடாது. சாதரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்” என்று, தனது ஆதங்கத்தை நடிவர் சூர்யா மிகவும் வேதனையுடன் கூறியிருந்தார்.

இந்நிலையில், “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து, காணொலியின் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக” கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், “உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக” சூர்யா கூறும் இத்தைய கருத்துக்கள், நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாக” குறிப்பிடப்பட்டு உள்ளது. 

அத்துடன், “நடிகர் சூர்யாவின் இந்த கருத்து மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளதாக” சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

மேலும், “நீதிமன்றம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் இது உள்ளது என்றும், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்” என்றும், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வலியுறுத்தி உள்ளார். இதனால், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்தின் இந்த கடிதம் தொடர்பான செய்திகள், இணையத்தில் வைரலாவதுடன், எதிர் மறையான கருத்துக்களையும், விமர்சனங்களையும் பெரிய அளவில் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.