“சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின் போது, என்னை புகழ்ந்து பேசினால் நடவடிக்கை எடுப்பேன்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அத்துடன், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் திட்டமிடப்பட்டதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்த முறை முடிக்கப்படுவதாகச் சபாநாயகர் அப்பாவு சமீபத்தில் அறிவித்திருந்தார். 

அதன் படி, செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு உள்ளாகவே அனைத்து துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை நடத்தி முடிக்க வேண்டிய சூழல், தமிழக அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. 

இதனால், “சட்டப் பேரவையில் சட்ட முன் வடிவு மற்றும் கேள்வி நேரத்தின் போது தலைவர்களைப் புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டிப்பாகவும், உறுதியாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும், “அவையில் நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையைப் பிறப்பிக்கிறேன்” என்றும், அவர் கூறியுள்ளார். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த உத்தரவால், “சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது உரையை ஆரம்பிக்கும் முன்பு பெரியார், கலைஞர், ஸ்டாலின் என வரிசையாகப் பாராட்டிப் பேசுவதை” அமைச்சர்கள் நிறுத்திக் கொண்டனர். 

இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ ஐயப்பன், முதல்வரின் உத்தரவை மீறி, அவரை பாராட்டிப் பேசி உள்ளார்.

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உடனடியாக எழுந்து திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் தன்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடித்ததற்குக் கண்டனம் தெரிவித்தார். 

குறிப்பா, “எதையும் லிமிட் ஆக வைத்துக் கொள்ளுங்கள் என்றும், நேற்றே இது தொடர்பாக கட்டளையிட்டேன்” என்றும் குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர், “மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இனி என்னை புகழ்ந்து பேசினால், திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.