பாயிஸ் லாக்கர் ரூம் விவகாரம்.. அதிர வைக்கும் உண்மை..!
By Aruvi | Galatta | May 11, 2020, 02:00 pm
பாயிஸ் லாக்கர் ரூம் விவகாரத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த வாரம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வந்த பாயிஸ் லாக்கர் ரூம் விவகாரத்தின் பின்னணியை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற குழுவை உருவாக்கி, அந்த குழுவில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் வகுப்பு பெண் தோழிகள் மற்றும் சிறுவயது பெண்களின் ஆபாச படங்களை பகிர்ந்து, அந்த படங்களுக்கு மதிப்பெண்ணும் வழங்கினர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து பூதாகாரமாக வெடித்தது.
குறிப்பாக, அந்த குழுவில், சிறு வயது மாணவர்கள் அறுவறுப்பான முறையில் பாலியல் ரீதியான கருத்துக்கள் பற்றி பேசுவது, பாலியல் கொடுமை செய்வது பற்றி உரையாடுவது உள்ளிட்டவை அரங்கேறி உள்ளன.
இது தொடர்பான பிரச்சனை வெடித்தபோது, இந்த குழுவில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் புகாரும் அளிக்கப்பட்டது.
டெல்லி மகளீர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் அளித்த புகாரையடுத்து, டெல்லி சைபர் கிரைம் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
இந்த விசாரணையில், சித்தார்த் என்ற ஒரு கற்பனையான பெயரை பயன்படுத்தி, போலியான சுயவிவரத்தைக் குறிப்பிட்டு, இந்த சமூக வலைத்தள பக்கத்தில் சிறுமி ஒருவர் உருவாக்கி உள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.
குறிப்பாக, ஸ்னாப்சாட் உரையாடல் உண்மையில், ஒரு பெண் (அனுப்புநர்) மற்றும் ஒரு பையன் (ரிசீவர்) இடையே நடைபெற்ற உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில், அந்த சிறுமி.. ஒரு ஆண் நபரின் போலி அடையாளத்தைப் பயன்படுத்தி, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் திட்டத்தை, அந்த குழுவில் பரிந்துரைத்துள்ளார். இதன் நோக்கம், எதிரில் உள்ள பையனின் எதிர்வினை மற்றும் அவனது மன வலிமையான தன்மையைப் பரிசோதிக்கும் விதமாக, இதை அனுப்பியதாகத் தெரியவந்தது.
இந்த உண்மை தன்மையைக் கண்டுபிடித்த டெல்லி போலீசார், இது தொடர்பாக, குறிப்பிட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளனர்.
மேலும், சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு போலியான ஐடியை உருவாக்குவது தவறு என்றாலும், அப்படி உருவாக்கியவரின் நோக்கம் தீங்கானது இல்லை என்பதாலும், இது தொடர்பாக எந்த புகாரும் தங்களுக்கு வரவில்லை என்பதாலும், இந்த பிரச்சனையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், விசாரணை நடத்திய போலீசார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த சிறுமியும் குறிப்பிட்ட அந்த பையனும் பாய்ஸ் லாக்கர் ரூம் கணக்குடன் இணைக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் அவர்களின் ஸ்னாப்சாட் தொடர்புகளின் ஸ்கிரீன் ஷாட் மட்டுமே, இன்ஸ்டாகிராம் குழுவில் உள்ளவர்களுடன் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.