2 வது திருமணம் செய்ய ஆசைப்பட்ட கணவன், அமெரிக்காவில் இருந்து கைக்குழந்தையுடன் மனைவியை சொந்த ஊரான தேனிக்கு விரட்டி அடித்ததால் பாதிக்கப்பட்ட பெண், கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். 

தேனி மாவட்டம் கூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பார்த்திபன். இவரின் மகள் 30 வயதான விஷ்ணு பிரியா என்ற பெண்ணுக்கும், அங்குள்ள ஓடைப்பட்டியை சேர்ந்த வாசகர் என்பவரின் மகன் விவேக் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு இரு வீட்டார் முறைப்படி திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

இந்த திருமணத்தின் போது, மணமகன் விவேக்கிற்கு 110 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை விஷ்ணு பிரியாவின் பெற்றோர் வழங்கி உள்ளதாகத் தெரிகிறது.

திருமணத்திற்குப் பிறகு, திருமணமான ஒரு மாதத்தில் மணமகன் விவேக், பி.எச்.டி. படிப்புக்காக அமெரிக்கா சென்றார். இதனால், அவர் அங்கேயே வசிக்கத் தொடங்கினார். அத்துடன், கூடவே தனது மனைவி மற்றும் தன்னுடைய குடும்பத்தினரையும் அவர் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றார். 

அதன் தொடர்ச்சியாக, விஷ்ணு பிரியா அமெரிக்கா சென்ற நிலையில் கர்ப்பம் அடைந்தார். 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது, விஷ்ணு பிரியா சொந்த ஊருக்குப் பிரசவத்திற்காக வந்தார். இங்கு, இத்தனை நாட்கள் தங்கி இருந்த நிலையில், அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு, தன்னுடைய கைக் குழந்தையுடன் அவர் மீண்டும் அமெரிக்கா சென்று, தன்னுடைய கணவருடன் வசித்து வந்தார். 

அப்போது, தனது கணவரின் படிப்புச் செலவுக்காக அவர் தன் மனைவியிடம் கூறி “உன் பெற்றோரிடம் இருந்து பணம் பெற்றுக் கொடுக்கச் சொல்லி” கேட்டு இருக்கிறார். அதன்படியே, அவர் மனைவியும் தன் பெற்றோரிடம் பேசி மேலும் சில லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி தனது கணவரிடம் கொடுத்து இருக்கிறார்.

அந்த பல லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்ட நிலையில், மேலும் மேலும் பணத்துக்கு ஆசைப்பட்டு கணவன் விவேக் மற்றும் அவருடைய குடும்பத்தினர், விஷ்ணு பிரியாவை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், மகன் விவேக்கிற்கு 2 வது திருமணம் செய்யத் திட்டமிட்டு, அவர் மனைவி விஷ்ணு பிரியாவை அமெரிக்காவில் இருந்து, அவரது குடும்பத்தினர் துரத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், நாடு திரும்பிய அவர் கூடலூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு கைக்குழந்தையுடன் வந்துவிட்டார். வீட்டிற்கு வந்ததும், அங்கு நடக்கும் கொடுமைகளைத் தனது பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட விஷ்ணு பிரியா அடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகவே தனது பெற்றோருடன் தங்கி உள்ளார். 

ஆனால், அதன் பிறகு தனது கணவர் தரப்பில் விஷ்ணு பிரியாவிற்கு எந்த வித ஆதரவோ, உதவியோ கிடைக்க வில்லை. இதனால், தனது கணவர் தன்னை கை கழுவி விட்டதை உறுதிப் படுத்திக்கொண்ட விஷ்ணு பிரியாவை, அங்குள்ள உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் புகார் செய்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கணவர் விவேக், மாமனார் வாசகர், மாமியார் ராஜீ, மைத்துனர் வினோத் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.