அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்றைய தினம் தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
 
``அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும். உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு, கூடுதல் கட்டணம் வர வாய்ப்பு நேரிடும். நுழைவுத்தேர்வு, கூடுதல் கட்டணம் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். உயர் சிறப்பு அந்தஸ்து மூலம் வெளிமாநில மாணவர்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்தாலும் அண்ணா பெயர் நீக்கப்படாது.

இந்த நிலையெல்லாம் வரக்கூடாது என்பதற்காகத்தான் உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு நினைக்கிறது. சிறப்பு அந்தஸ்துக்காக எதையும் பறிகொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. நாம் ஏற்கனவே நல்ல நிலையில்தான் இருக்கிறோம்; அதனால் உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை"

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடும் எதிர்ப்பு, தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சிமிகு போராட்டம் ஆகியவற்றிற்குப் பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இது காலதாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது.
 
அமைச்சர் இப்படிப் பேட்டி கொடுப்பதைவிட தமிழக அரசின் இந்த முடிவினை உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் வாயிலாக வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கிய, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்வதற்கு பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநர் அவர்களுக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

நேற்றைய தினம் அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி திமுக இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், பொறியியல் கல்லூரி முன் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.