மதுரையில் ஆவின் பால் பாக்கெட்டில் துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆவினில் 250 மி.லி., 500 மி.லி., ஒரு லிட்., பால் பாக்கெட்டுகள் பால் டிப்போக்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.இதில் 500 மி.லி., நிலைப்படுத்திய (ஸ்டேண்டர்டு மில்க்) பாக்கெட்டுகளில் இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீசுவதாகவும், தண்ணீர் அதிகம் கலந்திருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதை கண்டித்து, அரசுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக சு.ஆ.பொன்னுசாமி நிறுவனத் தலைவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

``மதுரை மாவட்டத்தில் பி.பி.குளம், விராட்டி பத்து, எல்லீஸ் நகர், மேல அனுப்பானடி, டி.ஆர்.ஓ காலனி, கூடல் புதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக விநியோகம் செய்யப்பட்டு வந்த சமன்படுத்தப்பட்ட, நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டிலேயே கெட்டுப் போனது போன்று இருந்துள்ளதோடு அந்த பால் துர்நாற்றம் வீசியுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் ஆவின் பாலில் தொடர்ந்து ஒருவார காலமாக துர்நாற்றம் வீசி வருவது தொடர்பாகவும், பால் கெட்டுப் போனது போன்று இருந்துள்ளதாலும் நுகர்வோர்கள் அதனை திருப்பி கொடுத்து வேறு பால் மாற்றித் தருமாறு கேட்பதால் பால் முகவர்களும், சில்லறை வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே ஆவின் பால் விற்பனை மூலம் பால் முகவர்களுக்கு சொற்ப அளவிலேயே வருமானம் கிடைப்பதால் நுகர்வோர் தரப்பில் இருந்து தொடர்ந்து ஒருவார காலமாக தொடர்ச்சியாக வந்த புகாரைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆவின் உயரதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், ஆவின் அதிகாரிகள் வாட்ஸ் அப் மூலமும் அவர்களின் கவனத்திற்கு மேற்கண்ட பிரச்சனையை கொண்டு சென்றுள்ளனர்.

பால் முகவர்கள் கூறிய புகாரை கேட்டுக் கொண்டு சரி செய்வதாக உறுதியளித்த அதிகாரிகள் ஒருவார காலத்தில் இதுவரை அதை சரி செய்ய முன் வராததால் இன்று வரை மதுரை மாவட்ட ஆவின் பாலில் துர்நாற்றம் வீசுகின்ற அதே நிலையே தற்போது வரை நீடிக்கிறது.

ஏற்கனவே மதுரை மாவட்ட பால் திட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 8கோடி ரூபாய் வரை முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சூழலில், மதுரை மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு மொத்த பால் குளிர்விப்பான் நிலையங்களில் பல கோடி ரூபாய் வரை மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அதில் இதுவரை ஒரேயொரு மொத்த பால் குளிர்விப்பான் நிலையத்தில் மட்டும் 62லட்சம் ரூபாய்க்கு மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடிகளாலும், முறைகேடுகளாலும் சிக்கி சீரழிந்து வரும் மதுரை மாவட்ட ஆவின் நிர்வாக சீர்கேட்டால் தற்போது தரமற்ற பாலினை விநியோகம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் "தாய்ப்பாலுக்கு நிகரான பால் ஆவின் பால்" என தமிழக அரசு விளம்பரம் செய்து வரும் நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் நிர்வாக சீர்கேடு காரணமாக ஆவின் பாலே துர்நாற்றம் வீசுகின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு அதன் தரம் தனியார் பால் நிறுவனங்களுக்கு மத்தியில்  சந்தி சிரிக்க தொடங்கியுள்ளது.

ஆவின் பால் கொள்முதல் நிலையங்களிலும், அதன் கூட்டுறவு சங்கங்களிலும், ஆவின் நிறுவனத்தின் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி அவர்களோ கோவில், கோவிலாக ஆறுகளுக்கும், குளங்களுக்கும் நகர்வலம் சென்று கொண்டிருக்கிறார். ஊழல் அதிகாரிகளை துணைக்கு வைத்து கொண்டு அவர்களுக்கு பதவி உயர்வு பெற்றுத் தருவதில் தனது பங்கை சிறப்பான முறையில் செய்து வருகிறார் ஆவின் நிர்வாக இயக்குனர் திரு வள்ளலார் ஐஏஎஸ் அவர்கள்.  

செயல்படாத பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி அவர்களையும், ஊழலுக்கு துணை போகும் ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. வள்ளலார் ஐஏஎஸ் அவர்களையும் கண்டித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக முதல்வரோ தான் ஒரு விவசாயி என சுய தம்பட்டம் அடித்துக் கொள்வதில் மட்டுமே நாட்களை கடத்தி வருகிறார். இனியாவது தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்"

என்று கூறப்பட்டுள்ளது.