டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ள 7 வது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணையை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 
தற்போது வெளியிட்டு உள்ளது.

இந்த போட்டிகள் அனைத்தும் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளானது, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகள் யாவும் முதலில் இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால், தற்போது இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் யாவும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அதன் படி, குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. 

குரூப் 1 ல்; இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பெற்று உள்ளன.

அதே போல், குரூப் 2 ல்; இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்று உள்ளன. 

அதன் படி, அக்டோபர் 24 ஆம் தேதி துபாயில் மாலை 6 மணிக்கு நடக்கும் போட்டியில், “இந்தியா - பாகிஸ்தான்” அணிகள் நேருக்கு நேர் மோதி விளையாடுகிறது.

அதாவது, துபாயில் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி இந்திய அணியானது தனது முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

அதன் தொடர்ச்சியாக,  அக்டோபர் 31 ஆம் தேதி துபாயில் நடக்கும் மற்றொரு போட்டியில், இந்திய அணி தனது 2 வது ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் மோதுகிறது.

நவம்பர் 3 ஆம் தேதி அபுதாபியில் நடக்கும் 3 வது போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

அதே போல், நவம்பர் 5 ஆம் தேதி பி பிரிவில் முதலிடம் பெற்ற அணியுடனும், நவம்பர் 8 ஆம் தேதி ஏ பிரிவில் 2 ஆம் இடம் பெறும் அணியுடனும் இந்திய அணி மோதி விளையாடுகிறது.

உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையி்ல், மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம் பெறுகின்றன. 

இந்த தகுதி சுற்று போட்டிகளில் வங்காளதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் மற்றும் பப்புவா நியூகினியா ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன. 

தகுதி சுற்றுப்போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை 20 ஓவர் போட்டியில் விளையாடத் தகுதி பெருகின்றன.

இதனிடையே, நீண்ட வருடங்களுக்குப் பிறகு, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது இரு நாட்டிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.