“டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்காதது ஏன்” என்று, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் உரை மீதான விவாதம் நேற்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. 

தமிழக சட்டப் பேரவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் கடந்த 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பிடிஎஃப் வடிவிலான காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் உரை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் படி, துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறுகிறது.

பட்ஜெட் உரை மீதான விவாதம் தொடங்கிய நிலையில், சட்டப் பேரவையில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, “பெட்ரோல் விலையை குறைத்த திமுக அரசு, டீசல் விலையை குறைக்கவில்லை என்றும், ஆகவே டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும், இதனால் விவசாயிகள் உள்ளிட்ட 

பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருவதாகவும்” குறிப்பிட்டு அதனை கேள்வியாக எழுப்பினார்.

இது தொடர்பாக பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பழனிவேல்ராஜன், “கடந்த 15 ஆண்டுகளில் 3 முறை அதிமுக ஆட்சியில் பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்பட்டது என்றும், ஆனால் திமுக 4 முறை பெட்ரோல் டீசல் விலையை குறைத்து உள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

“தற்போது அரசின் திட்டங்கள் அதற்கு உரியவர்களுக்கு பயன்படும் வகையில் நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவே, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதின் அடிப்படையில் இது வழங்கப்பட்டு வருவதாகவும்” அவர் கூறினார்.

அத்துடன், “இப்படியான ஆய்வின்படியே, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது என்றும், இதனால் 2 கோடி பேர் நேரடியாக பயன் பெற்று வருவதாகவும்” அவர் சுட்டிக்காட்டினார். 

“ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வின் படி, 5 லட்ச ரூபாய்க்கும் குறைவான வாகனங்கள் அதிகம் இருப்பதாகவும், இருசக்கர வாகனங்கள் அதிகம் இருப்பதாலும் பெட்ரோல் விலையை 4 ரூபாய் குறைத்திருப்பதாகவும்” நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.

மேலும், “டீசலை பயன்படுத்துவோரின் வாகனங்கள், 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையலானவை என்றும், இவை டீசலை பயன்படுத்தி வரும் நிலையில் டீசல் விலையை குறைப்பது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

“இப்படியாக, டீசல் விலையை குறைக்க பல்வேறு ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் டீசல் அதிகம் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்துத் துறை, மீனவர்களுக்கும் கூடுதலாக டீசல் மானியம் வழங்க முடிவு செய்து இருப்பதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, “பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றை யார் யார் பயன்படுத்துகிறார்கள் என்றும், அவர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட தகவல் எதுவும் அரசிடம் இல்லை” என்றும் சுட்டிக்காட்டிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “விவசாய பணிகளுக்கு டிராக்டர் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நேரடியாக டீசல் மானியம் சென்றடையக் கூடிய வகையில் ஆய்வு செய்து வெளிப்படையாகத் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

“தற்போது பெட்ரோலுக்கு 3 ரூபாய் விலை குறைக்கப்பட்ட நிலையில், அது குறித்து தினமும் ஆய்வு செய்து வருவதாகவும்” நிதியமைச்சர் கூறினார்.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.