13 வயது சிறுமி, முதல் நாள் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு இரையான நிலையில், மறுநாள் தந்தையை இழந்த சம்பவம் சோகத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அத்துடன், இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். 

இந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த ​​கோலு யாதவ் மற்றும் தீப்பு யாதவ் ஆகிய இருவரும், வேலைக்கு செல்லாம் வெட்டியாக ஊர் சுற்றி வந்துள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில், இந்த 13 வயது சிறுமி பள்ளி சென்று வரும் போதும், அந்த சிறுமி மீது சபலப்பட்ட அந்த இரு இளைஞர்களும், அந்த சிறுமியை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று திட்டம் தீட்டி உள்ளனர். அந்த திட்டத்தைச் செயல்படுத்தவும், அவர்கள் இருவரும் சரியான நேரம் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி திங்கள் கிழமை மாலை அந்த சிறுமி, தங்களின் விவசாய நிலத்தில் இருந்து தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிக்கொண்டு இருந்து உள்ளார்.
 
​​அப்போது, அந்த சிறுமியை வழி மறித்த கோலு யாதவ் மற்றும் தீப்பு யாதவ் ஆகிய இரு இளைஞர்களும், அந்த சிறுமியை அங்கிருந்து துதூக்கிச் சென்று, அருகில் உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த சிறுமியை கடத்தி இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனையடுத்து, பாலியல் ஆசைகள் எல்லாம் தீர்ந்த பிறகு அந்த சிறுமியை அவர்கள் விடுவித்து உள்ளனர். இதனையடுத்து, அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து உள்ளார். வீட்டில், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை, தன்னுடைய தந்தையிடம் கூறி உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, தனது மகளை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கோலு யாதவ் மற்றும் தீப்பு யாதவ் ஆகியோரை அழைத்து விசாரித்து உள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

அதன் தொடர்ச்சியாக, அந்த குற்றவாளிகளின் சகோதரர் அந்த பெண்ணின் தந்தையிடம், “நாங்கள் போலீஸ் அதிகாரியின் மகன் என்றும், அதனால் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும், அவர்கள் பகிரங்கமாக மிரட்டியதாகத் தெரிகிறது.

அதன் பிறகு, மறுநாள் அந்த பெண்ணின் தந்தை அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள், “சிறுமியின் தந்தை உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், இது அந்த பலாத்கார குற்றவாளிகளின் சதி வேலை” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்கள். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.