11 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு, பள்ளி ஆசிரியர் பாலியல் டார்ச்சர் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியரை காப்பாற்ற 
அலுவலர்கள் முயல்வதாக புதிய குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. 

மதுரை நகரில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மதுரை மாநகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், கொரோனா பரவல் காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சில தளர்வுகளுக்குப் பிறகு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக இணைய வழி பாடம் நடத்தப்பட்டன.

அப்படி, இணைய வழி பாடம் படிப்பிற்காகத் தொடங்கப்பட்ட வாட்ஸ்ஆப் குழுவில், குறிப்பிட்ட இந்த 11 ஆம் வகுப்பு மாணவியும் இணைந்திருந்தார். 

அப்போது, அந்த வாட்ஸ்ஆப் குழுவில் அட்மினாக இருந்த அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், குறிப்பிட்ட மாணவிக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் ஆபாசமான படங்களை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, ஆபாசப் படத்தை அனுப்பியது ஆசிரியர் என்பதால், எதுவும் சொல்ல முடியாமல் அப்படியே அமைதியாக இருந்ததாகவும் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட அந்த மாணவியைத் தனிமையில் அழைத்துச் சென்று அந்த ஆசிரியர், அந்த மாணவியை யாரும் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அழுதுகொண்டே வீடு திரும்பி உள்ளார். அத்துடன், இது தொடர்பாகத் தனது பெற்றோரிடம் அவர் புகார் கூறியதாகவும், அதன் தொடர்ச்சியாகவே, மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்மந்தப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில், பல்வேறு தளர்வுகளுக்குப் பிறகு, தற்போது 9 ஆம் வகுப்பு முதல் மாணவ மாணவிகளுக்குப் பள்ளிகள் செயல்படத் தொடங்கி உள்ளன. இதனால், அனைத்து மாணவ மாணவிகளும் தொடர்ந்து பள்ளிக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியரை காப்பாற்ற, அந்த பள்ளியின் அலுவலர்கள் முயல்வதாக புதிய குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது, தொடர்பாகப் பள்ளி சார்பில் யாரும் எந்த விளக்கமும் அளிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், சம்மந்தப்பட்ட ஆசிரியரை காப்பாற்ற, அந்த பள்ளியின் அலுவலர்கள் முயல்வதாக எழுந்த குற்றச்சாட்டில், அந்த பள்ளியின் அலுவலர்களுக்கும் தற்போது சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.