பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடகா பாஜக அமைச்சர் சிறப்பு விசாரணை குழு முன், “அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லங்க” என்று, வாக்குமூலம் அளித்து உள்ளார்.

அதாவது, கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவை சேர்ந்த 60 வயதான ரமேஷ் ஜர்கிஹோலி, அங்குள்ள ஒரு ஹோட்டல் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடையுடன் இளம் பெண்ணுடன் ஒருவருடன் ஆபாசமான முறையில் இருக்கும் வீடியோ மற்றும் வாட்ஸ் ஆப்பில் பேசிக்கொண்ட ஆடியோ ஆதாரங்கள் கடந்த வாரம் வெளியாகி கர்நாடக மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. 

வட கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், “அணைகள் குறித்து ஆவணப் படம் எடுக்கப் போவதாகவும், அதற்கு அரசு சார்பில் உதவி செய்யுமாறும்” அமைச்சர் ஜர்கிஹோலியை அணுகி இருக்கிறார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறிய அமைச்சர் ஜர்கி ஹோலி, அவருடன் பலமுறை பாலியல் உறவு வைத்துக்கொண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனால், அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து, “தன் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபணமாகும்” என்றும், அவர் கூறியிருந்தார்.

இப்படியான சூழ்நிலையில், பாஜக அமைச்சர் ரமேஷ் ரமேஷ் ஜார்கிகோளி உடன் வீடியோவில் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் இளம் பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். 34 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், பேசி உள்ள சம்மந்தப்பட்ட இளம் பெண், “ரமேஷ் ஜார்கிகோளியுடன் நான் இருந்த ஆபாச வீடியோ வெளியானதன் மூலம் எனது மானம், மரியாதை போய் விட்டது. இந்த வீடியோவை யார் எடுத்தது? யார் வெளியிட்டது? என்பது பற்றி எனக்கு தெரியாது.

எனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரமேஷ் ஜார்கிகோளி கூறினார். ஆபாச வீடியோ வெளியானது குறித்து எனது வீட்டில் வந்து நிறைய பேர் கேட்கிறார்கள். எனது தந்தையும், தாயும் 2 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளனர். நானும் 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து விட்டேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது. இந்த வீடியோ வெளியான விவகாரத்தால் எனது குடும்பத்தினருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன. 

இதனால், உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் எனது குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்க கேட்டு கொள்கிறேன்” என்று, அந்த வீடியோவில் அந்த இளம் பெண் கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் தான், நேற்றைய தினம் விசாரணை குழு முன்னிலையில் ஆஜராகி முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். 

அதில், “குறிப்பிட்ட அந்த வீடியோவில் பாலியல் காட்சிகளில் இருப்பது நான் அல்ல என்றும், குறிப்பிட்ட அந்த வீடியோ காட்சியை காட்டி முதலில் என்னிடம் காண்பித்து பணம் பறிக்க திட்டமிட்டனர். இதற்கு நான் ஒத்துப்போகவில்லை என்பதால், காணொலிக் பதிவை வெளியிட்டு என் பெயரை கெடுக்க முயற்சித்து உள்ளனர்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் பாலியல் புகார் வழக்கில், அந்த வீடியோவில் உள்ள குரலை ஒப்பிட்டு பார்க்க, குரல் மாதிரிகளை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அனுப்பி வைத்திருந்தனர். 

இந்த நிலையில் தான், முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியை, நேரில் வரவழைத்து தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்கள். இதன் பிறகே, இவரது குரல் குறித்து தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கில் இதுவரை வீடியோ பதிவில் இருக்கும் சம்மந்தப்பட்ட பெண் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரின் வீட்டில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு உள்ளன. எனினும், அந்த பெண் தொடர்ந்து தற்போது வரை தலைமறைவாக இருக்கிறார். இதனால், கர்நாடக மாநில அரசியலில் தற்போது  பெரிய சர்ச்சையானது மீண்டும் வெடித்து உள்ளது. எனினும், இது, பாஜகவிற்கு அவ பெயரை ஏற்படுத்தி உள்ளதாகவும் அந்த மாநில அரசியல் கட்சியினரால் விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.