கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பலரது வாழ்வாதாரத்தை பாதித்தது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கினர்.

இதன் காரணமாக வங்கிகள், கடன் தவணையை செலுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கியது. ஆனால், இதற்கான வட்டியுடன் சேர்த்து கடன் மறுசீரமைப்பு செய்யப்படும். இந்த 6 மாத கால வட்டியை வங்கிகள் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில் நாட்டின் மிகப்பெரும் வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அதன் வாடிக்கையாளர்களின் கடன்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன்படி புதிய திட்டத்தை அறிவித்துள்ள பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம், கடனுக்கான இ.எம்.ஐ. தவணைகளுக்கு, அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கியுள்ளது.

இதனை பெறுபவர்கள் தங்களின் கடன் வட்டி விகிதத்துக்கு மேல் 0.35 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார இழப்புக்கு ஆதாரம் காட்டினால் மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும் என நிபந்தனை விதித்துள்ள வங்கி, ஆகஸ்ட் மாத வருமானம், கடந்த பிப்ரவரி மாதத்தை விட குறைவாக இருப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

வீடு, கல்வி, வாகனம் மற்றும் தனி நபர் கடன்களுக்கும் மறுசீரமைப்புத் திட்டம் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, இணையதளத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ள வங்கி நிர்வாகம், விண்ணப்பத்துக்கான கடைசி நாள் வருகிற டிசம்பர் 24 எனவும் தெரிவித்துள்ளது. மார்ச் 1-ஆம் தேதிக்கு பிறகு கடன் வாங்கியவர்கள் இந்தத் திட்டத்தால் பலன்பெற முடியாது.

இதற்கான வழிகாட்டுதல்களையும் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.

அந்த வழிகாட்டுதலின் படி, வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து கடன்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். மார்ச் 1ம் தேதிக்கு முன்பாக கடன் பெற்றவர்கள் இந்த கடன் சலுகையை கோர தகுதி பெற்றவர்கள். இவர்கள் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை கடன் தவணைகளை தாமதம் இன்றி செலுத்தியிருக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால், ஏற்பட்ட வருவாய் இழப்புக்கான ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டும்.

எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கடன் எண்ணை பதிவு செய்தால் உங்களுக்கான சலுகை விவரங்கள் தெரிய வரும். மாற்றாக வங்கிக்கிளைக்கு நேரில் சென்றும் தவணை சலுகையை பெறலாம். டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த சலுகைக்கு விண்ணப்பிக்கலாம்.

கடன் தவணைகளை 24 மாதம் வரை தள்ளிப்போடலாம். சலுகைக்காலத்திற்கு பிறகு வங்கி கடன் தவணை காலத்தை மறுசீரமைப்பு செய்து கொள்ளலாம். வேறு கடன்கள் பெறுவதை வங்கிகள் மறுக்க முடியாது. கடன் தவணை மட்டுமே ஒத்திவைக்கப்படுமே தவிர வட்டிக்கு எந்த விலக்கும் இல்லை. எனவே, எத்தனை மாதங்கள் சலுகை பெற்றாலும் அதற்கான வட்டியை திரும்ப செலுத்தியே ஆக வேண்டும்.

தவணைகளோடு வட்டியும் சேருவதால் மாத தவணை தொகை அதிகரிப்பதோடு தவணைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தவணை சலுகை பெறுவோரிடம் 0.35 சதவிதம் வட்டி வசூலிக்கப்படும் எனவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.