புதிய தேசிய கல்வி கொள்கைக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்தப் புதிய கல்வி கொள்கையை தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துவருகின்றன. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கைகள் பின்பற்றப்படும் எனக்கூறி, தமிழகத்தின் ஆளும் அரசான அதிமுகவும், கல்விக் கொள்கைக்கான தன்னுடைய முதல் எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழகத்தில் தற்போதைக்கு சிறப்புக்குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது.

குழு அளிக்கும் அறிக்கையில் பேரில், அடுத்தகட்ட எதிர்ப்பு அல்லது ஆதரவை அதிமுக அரசு தெரிவிக்கும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.

கல்விக் கொள்கைக்கு, எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கல்வி ஆர்வலர்களும் ஊடகங்கள் வழியாகவும் சமூக வலைதளங்கள் வழியாகவும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதில் ஒருவராக, கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் என்பவர், "1976ல் ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டாலும் பெரிதாக மத்திய அரசின் தலையீடு இருந்ததில்லை. ஆனால், இப்போது ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் பள்ளிக் கல்வியை மத்தியப் பட்டியலில் உள்ள ஒரு அம்சத்தைப்போலவே மத்திய அரசு கருதுகிறது. அந்த அம்சத்திற்கு வலுவூட்டும் வகையில்தான் இந்த புதிய கல்விக் கொள்கை வரைவு அமைந்திருக்கிறது" என கட்டுரை ஒன்றில் இந்த வரைவு அறிக்கை குறித்து சுட்டிக்காட்டினார்.

ஆகவே பிற மாநிலங்களைவிடவும், தமிழகத்தில் இந்த புதிய கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புகள் வலுவாக இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம், புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்ற அவர் கல்வி கொள்கை குறித்து முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதன் விவரங்கள் இங்கே...

``பல ஆண்டுக்கு ஆய்வுக்குப் பிறகே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. அனைத்துத் தரப்புகளின் கருத்துகல்ளை கேட்டபிரகே புதிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டட்து.
 
புதிய கல்விக் கொள்கையில் எந்தப் பாகுபாடும் இல்லை. கல்விக் கொள்கையை அமல்படுத்துவது சவாலான பணியாக இருக்கும்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். கல்விக் கொள்கை மிக பெரிய சீர்திருத்தத்தைக் கண்டு சிலருக்கு வருத்தம்.

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க, வளர்ச்சியை அதிகரிக்க புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னேறி செல்ல சீர்திருத்தமே ஒரே வழி. எதிர்காலத்துக்கு இளைஞர்கள் தயாராக உள்ளனர்.

ஆரோக்கியமான விவாதங்கள் கல்வித்துறையை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்லும். மாணவர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

தாய்மொழி கல்வி மூலம் மாணவர்களின் அடித்தளம் சிறப்பாக இருக்கும். மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி இருக்க வேண்டும்.

முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை. அதற்காகவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. மாற்றத்தை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு தயாராக இருக்க வேண்டும்.

கல்வியின் சிறந்த நோக்கமே மனிதர்களை உருவாக்குவது தான் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச குடிமகன்களாக இருக்க வேண்டும். ஆனால் நமது வேர்களை மறக்கக் கூடாது.

21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்காகவே தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த உரை, புதிய கல்வி கொள்கையை எதிர்ப்போர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.