விவாகரத்து பெற்று வீட்டில் இருந்த சகோதரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவருடைய 4  சகோதரர்களும் சேர்ந்து சகோதரியைக் கொன்று உடலை எரித்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தைகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான பிரதீபா மாத்ரே என்ற பெண், ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கணவரிடமிருந்து அவர் விவகாரத்து பெற்று, தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

அங்கு, தனது சகோதரர்கள் 4 பேருடன் பிரதீபா மாத்ரே, வசித்து வந்துள்ளார்.  சகோதரர்களுடன் பிரதீபா மாத்ரே வசித்து வந்தாலும், சிறிது காலம் வேலைக்குச் செல்லாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்த நிலையில், சிறிது காலத்திற்குப் பிறகு அந்த பகுதியில் உள்ள பீர் பாரில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

அங்கு வேலைக்குச் சென்ற சில நாட்களிலேயே, பிரதீபா மாத்ரேயின் செயல்பாட்டில் சில மாற்றங்கள் காணப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், சகோதரி பிரதீபா 
மாத்ரேவின் நடத்தையில், அவருடைய 4 சகோதரர்களும் சந்தேகம் அடைந்துள்ளனர்.
 
இது தொடர்பாகச் சகோதரி பிரதீபா மாத்ரேயிடம், அவருடைய 4 சகோதரர்களும் சண்டை போட்டு, கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவர்களுக்குள் கடும் பிரச்சனை எழுந்துள்ளது.

இதனால், தன் சகோதரியை வீட்டில் இருந்து வெளியேறி, தனியாக வசிக்குமாறு 4 சகோதரர்களும் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், இதனை ஏற்க பிரதீபா மாத்ரே மறுத்து விட்டார். இதனால், அவர்களுக்குள் மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது.

இதில் கடும் ஆத்திரமடைந்த 4 சகோதரர்களும் ஒன்றாகச் சேர்ந்து கடந்த மே மாதம் 1 ஆம் தேதி இரவு, சகோதரி பிரதீபா மாத்ரே வீட்டில் தனியாகத் தூங்கிக்கொண்டிருக்கும் போது, அவரின் கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். 

அதன் பிறகு, அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டி அருகில் உள்ள வயல் வெளிக்கு எடுத்துச் சென்று, அங்கு விறகு.. டயர்.. மண்எண்ணெயை ஆகியவற்றைக் கொண்டு, சகோதரியை எரித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக எரித்த சகோதரியின் உடலை, அங்குள்ள ஒரு ஓடையில் வீசி விட்டுச் சென்று விட்டனர்.

இதனையடுத்து, பிரதீபா மாத்ரே கொலை வழக்கு குறித்து, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் படி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

விசாரணையில், சகோதரியின் நடத்தையில் சந்தேகம் மட்டுமே இருந்ததாகவும், ஆனால், எதையும் உறுதி செய்யவில்லை என்றும், தெரிய வந்தது. மேலும், சந்தேகப் பட்டதாலேயே, 4 சகோதரர்களும் சேர்ந்து கொஞ்சம் கூட பாசம் இல்லாமல், நம்பிக்கை இல்லாமலும் தன் சகோதரியைக் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின் சகோதரர்களான 31 வயதான நாதா அசோக் பாட்டீல், 24 வயதான பகவான் அசோக் பாட்டீல், 20 வயதான பாலாஜி அசோக் பாட்டீல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

அத்துடன், தலைமறைவாக உள்ள மற்றொரு சகோதரரான பாண்டுரங் அசோக் பாட்டீலை, போலீசார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, விவாகரத்து பெற்று வீட்டில் இருந்த சகோதரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவருடைய 4 சகோதரர்களும் சேர்ந்து சகோதரியைக் கொன்று உடலை எரித்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.