கடந்த சில தினங்களாக ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் மிகுந்த வருத்தத்தோடு இருந்த சூழலை கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் தற்போது கொஞ்சம் மாற்றி இருக்கிறார். ஆம்.. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து அவரது புகைப்படத்தோடு முக்கிய தகவலை சண்முக பாண்டியன் தற்போது பகிர்ந்து கொண்டார். நுரையீரல் பிரச்சனை காரணமாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் மற்றும் அவரது மனைவி திருமதி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மருத்துவமனையிலேயே இருந்து விஜயகாந்த் அவர்கள் உடனிருந்து கவனித்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று தற்போது உடல்நிலை தேறி வரும் தனது தந்தையும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மற்றும் அம்மா பிரேமலதா விஜயகாந்த் உடன் இருக்கும் தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டேட்டஸில் சண்முக பாண்டியன் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், “கேப்டன் தற்போது நன்றாக இருக்கிறார்… வெகு விரைவில் வீடு திரும்புவார்… எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்!!” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் & பொதுமக்கள் என அனைவரும் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து மிகுந்த கவலையுடன் இருந்த சூழலில் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வதந்திகளும் பரவி அந்த கவலையை அதிகரிக்கச் செய்த நிலையில், தற்போது கேப்டன் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் மருத்துவமனை புகைப்படங்களை வெளியிட்டிருப்பது அனைவருக்கும் உற்சாகத்தையும் ஆறுதலையும் கொடுத்திருக்கிறது. சண்முக பாண்டியன் பகிர்ந்துள்ள அந்த புகைப்படங்கள் இதோ...

கடந்த நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை முதலில் சீராக இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக நுரையீரல் பிரச்சனை காரணமாக சீராக இல்லை என கடந்த நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கேப்டனின் உடல்நிலை குறித்து வீடியோ மூலமாக அனைவருக்கும் அறிவித்து இருந்தார். அதன்படி தற்போது கேப்டன் நல்ல உடல்நிலையோடு இருப்பதாகவும் தெரிவித்த படியே அடுத்த சில தினங்களில் வீடு திரும்புவார் என்றும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து தற்போது அவரது மகன் சண்முக பாண்டியன் அவர்களும் நல்ல தகவல் கொடுத்திருப்பதால் விரைவில் விஜயகாந்த் அவர்கள் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெகு விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வர கலாட்டா குழுமம் மனமாற வேண்டிக் கொள்கிறது.