தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சயின்ஸ் பிக்சன் ஏலியன் திரைப்படமான அயலான் திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸுக்காக தயாராகி வருகிறது.

முன்னதாக மண்டேலா படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.

இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். நேர்கொண்ட பார்வை & வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் குமாருடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், “நீண்ட இடைவெளிக்குப்பின் AK சாரை சந்தித்தேன். என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு உன்னதமான சந்திப்புகளில் ஒன்று சார்... உங்களுடைய வாழ்த்துக்களுக்கும் பாசிட்டிவ்வான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சார்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் அந்தப் பதிவும் ட்ரெண்டாகும் அந்த புகைப்படமும் இதோ…