இந்திய திரையுலகின் ஆகசிறந்த கலைஞர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ். தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி குணசித்திர வேடம் தொடங்கி முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைகலைஞர் நடிகர் சத்யராஜ். இவரது மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் கடந்த 2003 ல் வெளியான ‘Student No 1’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக திரையுலகில் பயணித்து வரும் சிபி சத்யராஜ் ஒவ்வொரு காலத்திற்கும் தனது நடிப்பு திறமையையும் கதை தேர்ந்தெடுக்கும் முறையையும் மாற்றி கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் வெளியான மண்ணின் மைந்தன், வெற்றி வேல் சக்தி வேல், லீ, நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, சத்யா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக தனது தந்தையும் பிரபல நடிகருமான சத்யராஜ் உடனான கூட்டணி போட்டு நடித்த ஜோர், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், மண்ணின் மைந்தன், ஜாக்சன் துரை ஆகிய திரைப்படங்கள் எல்லாம் இதுவரை சூப்பர் ஹிட்டை அவருக்கு கொடுத்துள்ளது.

அதன்படி தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் சத்யராஜ், சிபி சத்யராஜ் கூட்டணி அமைக்கும் திரைப்படமாக உருவாகவுள்ளது ‘ஜாக்சன் துரை 2’. ஹாரர் காமெடியில் கடந்த 2016 ல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜாக்சன் துரை படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ள ஜாக்சன் துரை 2 படத்தை இயக்குகிறார் தரணி தரண். இந்நிலையில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜாக்சன் துரை படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு. ஜாக்சன் என்ற ஆங்கிலேயர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் மாஸாக நிற்க அவருக்கு பின் குதிரையில் சிபிராஜ் வரும் முதல் பார்வை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது. மேலும் இப்பதிவுடன் “ஜாக்சன் தி மான்ஸ்டர் “ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவரான சத்யராஜின் 250 வது படமாக இப்படம் உருவாகுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ கிரீன் தயாரிப்பு நிறுவனம் ஐ ட்ரீம் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் எம் எஸ் சரவணன் – எஸ் ஆர் பாத்திமா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட் ராமன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு செய்கிறார் சபீக் முகமத் அலி. மேலும் படத்திற்கு இசையமைக்கிறார் சித்தார்த் விபின்.