தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடிக்கும் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். RS இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாகவுள்ளது.

இதனை அடுத்து சூர்யாவுடன் வாடிவாசல் திரைப்படத்தில் இணையும் இயக்குனர் வெற்றிமாறன், தொடர்ந்து நிலம் எல்லாம் ரத்தம் எனும் வெப் சீரிஸில் இரண்டு எபிசோடுகளை இயக்கவுள்ளார். இதனை அடுத்து தான் ஒரு பெரிய படம் இயக்கும் திட்டம் வைத்திருப்பதாக சமீபத்தில் வெற்றி மாறன் தெரிவித்திருந்தார். இந்த பெரிய படம் உலகநாயகன் கமல்ஹாசன் உடனா அல்லது தளபதி விஜய் உடனா என்ன ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறனின் கதை-திரைக்கதையில் தயாராகும் அதிகாரம் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னதாக இயக்குனர் P.வாசு இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் திரைப்படமும் விரைவில் வெளிவர தயாராகி வருகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களாக லாரன்ஸின் அதிகாரம் திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தன. முன்னதாக எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் அதிகாரம் திரைப்படத்தையும் இயக்குகிறார். சமீபத்தில் நயன்தாரா அடுத்த நடிக்கும் புதிய திரைப்படத்தையும் துரை செந்தில்குமார் இயக்குவதாக அறிவிப்பு வெளியானதால் அதிகாரம் திரைப்படம் கைவிடப்பட்டதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் வதந்திங்கள் பரவின.

இந்நிலையில் அதிகாரம் படத்தின் தயாரிப்பாளரான S.கதிரேசன் அவர்கள் இதற்கு விளக்கமளிக்கும் வகையில், “அதிகாரம் திரைப்படம் கைவிடப்பட்டதாக பரவி வரும் வதந்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. அதிகாரம் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளும் ஷூட்டிங் குறித்த திட்டங்களும் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதை அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறோம்” என தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்களின் அந்த பதிவு இதோ…