கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்த லவ் டுடே திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட லவ் டுடே திரைப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இளைஞர்கள் கூட்டம் ரிப்பீட் மோடில் தியேட்டர்களுக்கு படைடுத்து வருகின்றனர். தமிழில் வெற்றி பெற்றுள்ள லவ் டுடே திரைப்படத்தை தெலுங்கில் வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு வெளியிடவுள்ளார். விரைவில் தெலுங்கு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே லவ் டுடே திரைப்படத்தின் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களின் இந்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து எமோஷனலான அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 

இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும், நள்ளிரவு காட்சிகளும், தியேட்டர் ஆக்கிரமிப்பும், அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நேற்று திங்கட்கிழமை ஆனாலும், பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆவதையும், குடும்பங்கள் வருவதையும் ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன். தமிழ்நாட்டிற்கு வெளியிலும் இதே நிலை இருக்கிறது (பெங்களூரு, கேரளா, மலேஷியா etc).

நான் நட்சத்திரம் இல்லை, உங்களில் ஒருவன். நீங்கள் என்மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக, என்னை கை தூக்கிவிட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது. நன்றி. என்னை நம்பியதற்கு அகோரம் அவர்களுக்கு நன்றி. நீங்கள் சிரிப்பதையும், கொண்டாடுவதையும், தியேட்டர் கதவுகளின் ஓரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். அதுவே எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. உங்களின் முகத்தில் மிளிரும் சந்தோஷமே எனக்கு சந்தோஷம். அதுவே நான் விரும்பியது, தியேட்டர்களில் சத்தமும், மகிழ்ச்சியான முகங்களும். நன்றி. நீங்கள் என்னை நேசிப்பதையும், என்மீது அக்கறை கொள்வதையும், ஆதரவு அளிப்பதையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதையும், மேலும் மிகவும் நேசிக்கிறேன் என்பதையும் மட்டும் இப்போது தெரிவித்துக்கொள்கிறேன். 

அபரித அன்புடன்,
பிரதீப் ரங்கநாதன்

என தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை இதோ…