இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே ஒன்றிணைந்த பொன்னியின் செல்வன் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக் மாஸ்டர் ஹிட்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகி இருக்கும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன், இளங்கோ குமரவேல் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனம் எழுதியுள்ளனர். தோட்டா தரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ள பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், தொடர்ந்து வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தின் ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்பாக பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மணிரத்தினம் அவர்களோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “மணி சாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். PS-2 உடன் PS-1ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாக பார்க்க வசதியாக இருக்கும் என... அவர் பதில்…” என தெரிவித்து, இயக்குனர் மணிரத்னத்தின் குறுஞ்செய்தியின் (Screen Shot) புகைப்படத்தை இணைத்துள்ளார். அதில் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள், “பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தை சில திரையரங்குகளில் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக” தெரிவித்திருக்கிறார். எனவே பொன்னியின் செல்வன் 2 ரிலீஸுக்கு முன்பாக பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் ஒரு வாரம் முன்பாக ரிலீஸாவதாக அறிக்கப்பட்டருப்பதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். இயக்குனர் நடிகர் & பார்த்திபன் அவர்களின் அந்த பதிவு இதோ…