மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் மம்மூட்டி நடிப்பில் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.  அந்த வகையில் மம்மூட்டியின் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் கிறிஸ்டோபர் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன.

முன்னதாக ஜல்லிக்கட்டு, அங்கமாலி டைரிஸ் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்திருக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படமும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே முதல் முறையாக ஜோதிகா உடன் இணைந்து மம்மூட்டி நடிக்க தயாராகி வரும் திரைப்படம் காதல் - தி கோர்.

முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபி இயக்கும் காதல் - தி கோர் திரைப்படத்தை Wayfarer Films மற்றும் Mammootty Kampany ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் சக்கரியா இருவரும் இணைந்து கதை திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர். 

காதல் - தி கோர் படத்திற்கு ஷாலு.K.தாமஸ் ஒளிப்பதிவில், பிரான்சிஸ் லூயிஸ் படத்தொகுப்பு செய்ய, மேத்யூஸ் புலிக்கண் இசையமைக்கிறார். காதல் - தி கோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடிகர் மம்முட்டி தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்தார்.

இந்நிலையில் காதல் தி கோர் படத்தின் மொத்த படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்ததாக வடக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இதோ…