ஆகச்சிறந்த நடிகராக தொடர்ந்து தரமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் இதுவரை இந்த ஆண்டில்(2022) வெளிவந்த மாறன், தி க்ரே மேன் (ஹாலிவுட்), திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

அடுத்ததாக தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 28ஆம் தேதி பூஜையோடு தொடங்கப்பட்டது. முன்னதாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.

1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜீவி பிரகாஷ் குமார் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிக்கும் முன்னணி கன்னட நடிகர் சிவராஜ்குமார் அவர்கள் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் முக்கியமான கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.