அட்டகாசமான கிரைம் திரில்லர் திரைப்படமாக இந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’ இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை விடுதலை முதல் பாகம் பெற்றது. ரசிகர்கள் கொண்டாடிய விடுதலை முதல் பாகம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ஜீ 5 தளத்தில் ‘viduthalai director’s cut’ என்ற பெயரில் வெளியானது. திரையரங்குகளில் வெளியான விடுதலை படத்தில் இல்லாத காட்சிகளுடன் விடுதலை திரைப்படம் இதில் இடம் பெற்று தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் ஜீ5 தளத்தில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் விடுதலை Directors Cut குறித்து நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் இயக்குனர்கள் வெற்றிமாறன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தனர். அதில் ஏன் கடைசி நிமிடம் வரை படம் முடிக்காமல் இருந்தீர்கள் என்ற கேள்வி இயக்குனர் வெற்றிமாறன் அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு அவர்,

“பாலுமகேந்திரா சார் சொல்வார், எந்த இயக்குனரும் படத்தை முடிக்க மாட்டார்கள். அவர் அந்த படத்தை கைவிடுகிறார்கள். நீ எந்த இடத்தில் படத்தை கைவிடுகிறீரோ அந்த இடம் தான் நீங்கள் எந்த மாதிரியான இயக்குனர் என்று தீர்மானிக்கும்.. அதுதான் இந்த படத்திலும் எனக்கென்னென்னா படத்தில் எந்தளவு என்னால் மாற்றங்கள் கொண்டு வர வாய்ப்பு உள்ளதோ அதுவரை நான் மாற்றங்கள் செய்து கொண்டு தான் இருப்பேன். எனக்கு எப்போது அந்த படத்தில் எதுவும் செய்ய முடியாது என்று தெரிய வருகிறதோ அப்போ நான் அந்த படத்தை பார்க்க மாட்டேன். நான் பார்த்தால் மீண்டும் மாற்றங்கள் செய்ய முன் வருவேன். இந்த படத்தில் பிரச்சனை என்னவென்றால் என்ன பன்னாலும் இந்த படம் அதை ஏற்றுக்கொண்டு உருப்பெற்று வருகிறது. அதே நேரத்தில் இந்த படம் வேலை செய்யும் என்று சொல்ல தைரியமும் இல்லை..

படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளது. படத்தின் இறுதியில் குமரேசன் அந்த பெண்ணை காப்பற்ற வேண்டும். அதே நேரத்தில் வாத்தியார் போலீசாரிடம் பிடிபடவும் கூடாது. அந்த குறிக்கோளுடன் பயணிக்க நிறைய கதாபாத்திரங்கள் உள்ளது. இந்த படத்தில் டிஎஸ்பி வரும்போது நேர்மையான போலீஸ் என்று நினைப்பார்கள் அடுத்த காட்சியே அவருடைய கோரமுகம் தெரிய வரும். இந்த படத்தில் உள்ள எதிர்மறையான குணங்கள் படமாக்க சவாலாக இருந்தது. அதனால் அதை எப்படி எங்கு பொருத்துவது என்று தெரியவில்லை..

ரிலீஸ் தேதி சொன்ன போது நான் முதலில் முடியாது என்று நினைத்தேன். ஒரு மணி நேரம் கழித்து நான் சொன்னேன் 31 ம் தேதி பண்ணிடலாம் என்று.. நான் ரீலிஸ் தேதி சொன்ன பிறகு நான்கு நாள் படம் பண்ணோம். நாங்கள் நிறைய சேர்க்க முயற்சி செய்தோம். எப்போதும் ஒன்றுதான் சொல்வேன் இது படம் எடுக்க சரியான முறை இல்லை. நாங்கள் முடிந்ததை செய்கிறோம் அவ்வளவு தான்..” என்றார் இயக்குனர் வெற்றிமாறன்.

மேலும் இயக்குனர்கள் இயக்குனர்கள் வெற்றிமாறன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோர் விடுதலை Directors Cut குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..