தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து சிறந்த படைப்புகளை கொடுத்து வருபவர் இயக்குனர் ராம். தனது முதல் திரைப்படமான கற்றது தமிழ் திரைப்படத்திலியே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய இயக்குனர் ராமின் அடுத்த படமான தங்க மீன்கள் 3 தேசிய விருதுகளை வென்றது.

தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளிவந்த தரமணி மற்றும் பேரன்பு ஆகிய தமிழ் படங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் தனி இடம் பிடித்த திரைப்படங்களாக ரசிகர்களின் இதயங்களை வென்றன. இந்த வரிசையில் அடுத்து இயக்குனர் ராம் முதல் முறை மலையாள நடிகர் நிவின்பாலியுடன் கைகோர்த்த திரைப்படம் ஏழு மலை ஏழு கடல்.நிவின் பாலி சூரி அஞ்சலி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஏழு மலை ஏழு கடல் திரைப்படம் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே தனது அடுத்த புதிய திரைப்படத்தை இயக்குனர் ராம் தொடங்கிவிட்டார். இந்த முறை யாரும் எதிர்பார்த்திராத காம்பினேஷனாக இயக்குனர் ராம் இயக்கத்தில் இப்புதிய படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இந்த புதிய திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். செவன் சிஸ் செவன் ஹில்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தை Disney+ Hotstar நிறுவனம் வழங்குகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையோடு தொடங்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ள படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ பதிவு இதோ…