ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் தற்போது நடந்து முடிந்துள்ளன. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய இரு அணிகளும் இறுதிப்போட்டியில் பலப்பரிட்சை கொண்டன.

ஆட்டத்தின் கடைசி நொடி வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டி கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிகச் சிறப்பான போட்டியாக அனைவரும் தெரிவிக்கும் அளவிற்கு மிகுந்த பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது. அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி இரண்டு கோல்கள் அடித்தது அர்ஜென்டினா ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சத்திற்கு செல்ல பிரான்ஸின் கிளியன் ம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார்.

இரு அணிகளும் சம பலத்தோடு ஆடிய இந்த போட்டி 3-3 என சமமான நிலையில், ஃபெனால்டி முறை நடத்தப்பட்டது. பெனால்ட்டியில் 4 க்கு 2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. மேலும் இந்த உலகக் கோப்பையின் சிறந்த வீரர்களுக்கான கோல்டன் பால் விருதையும் லியோனல் மெஸ்ஸி தட்டி சென்றார். அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான மெஸ்ஸிக்கு உலக அளவில் எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்குறதோ இந்தியாவிலும் அதே அளவிலும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் நேற்று லியோனல் மெஸ்ஸி உலக கோப்பையை கையில் ஏந்திய போது இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினர்.

இது ஒரு புறம் இருக்க தமிழ் சினிமாவில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அடலீ இயக்கத்தில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை வர்ஷா பொல்லம்மா FIFA உலக கோப்பை இறுதிப்போட்டி பிகில் திரைப்படத்தை நினைவுபடுத்துவதாக குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வர்ஷா பொல்லம்மாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவு இதோ…