தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருள்நிதி நடிப்பில் இந்த ஆண்டில்(2022) அடுத்தடுத்து டைரி, D-Block, தேஜாவு ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றன. முன்னதாக நடிகர் அருள்நிதியின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்த திரைப்படம் டிமான்டி காலனி. 

இமைக்கா நொடிகள் மற்றும் சீயான் விக்ரமின் கோப்ரா ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் முதல் திரைப்படமாக வெளிவந்த டிமான்ட்டி காலனி திரைப்படம் ஹாரர் த்ரில்லர் படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான டிமான்டி காலனி திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் கதை மற்றும் திரைக்கதையில் உருவாகும் டிமான்டி காலனி பார்ட் 2 திரைப்படத்தை அவரது இணை-இயக்குனர் வெங்கடேஷ் வேணுகோபால் இயக்கவுள்ளதாகவும் ஹாலிவுட்டின் ஹாரர் திரில்லர் திரைப்படங்களான தி கான்ஜுரிங் சீரிஸ் படங்களின் பாணியில் டிமான்டி காலனி படத்தின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நவம்பர் 30 ஆம் தேதி டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் அருள்நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். 

தீபக்.D.மேனன் ஒளிப்பதிவில் குமரேசன்.D படத்தொகுப்பு செய்யும் டிமான்டி காலனி 2 படத்திற்கு சாம்.CS இசையமைக்கிறார். அஜய் ஞானமுத்துவின் ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.