சமீபத்தில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின் பாடல் பதிவின் போது திடீரென்று படகு கட்டுபாடை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் விஜய் ஆண்டனி கடும் விபத்திற்கு ஆளானார். இந்த செய்தி திரையுலகனரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் விஜய் ஆண்டனி பூரண குணமடைய அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வந்தனர். மேலும் விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்த நிறைய வதந்திகள் இந்த விபத்தை சுற்றி பரவியது. பின் விஜய் ஆண்டனி சார்பில் உடல்நலம் குறித்து விளக்கம் அளிக்கபட்டது. விஜய் ஆண்டனி உதடு மற்றும் பற்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சையில் அவர் உள்ளதாகவும் தகவல் அளித்தனர்.

விபத்து குறித்து விஜய் ஆண்டனி கடந்த மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் கட்டை விரல் உயர்த்தி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன், “நண்பர்களே பிச்சைக்காரன் 2 படபிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் எனது தாடை மற்றும் மூக்கு பகுதியில் அடிப்பட்டது. நான் அதிலிருந்து பாதுகாப்பாக குணமடைந்து கொண்டிருக்கிறேன். தற்போது தான் அறுவை சிகிச்சை முடிந்தது. உங்களிடம் விரைவில் பேசுவேன். எனது ஆரோக்கியத்திற்கான உங்கள் பிராத்தனைக்கும் ஆறுதலுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தன் உடல்நலம் குறித்த வதந்திகளுக்கான முற்றிபுள்ளியை வைத்தார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனி மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன் வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன் அன்புக்கு நன்றி.” என்று பதிவிட்டு உள்ளார்.

அன்பு இதயங்களே
நான் 90% குணம் அடைந்து விட்டேன்.
உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.
என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்😊
வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்🙏
அன்புக்கு நன்றி

— vijayantony (@vijayantony) February 2, 2023

இதனையடுத்து விஜய் ஆண்டனி ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அந்த பதிவை அதிகம் பதிவேற்றி தங்கள் ஆறுதல் வார்த்தைகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த பதிவின் மூலம் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர். தனித்துவமான இசை துள்ளலான பாடல்கள் காலம் கடந்தாலும் இன்றும் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளது 40 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக 'நான்' திரைப்படம் மூலம் அறிமுகமாகினார். தொடர்ந்து படங்களை தேர்ந்தெடுத்து அதில் நேர்த்தியாக நடித்து வெற்றியுடன் பாராட்டுகளையும் பெற்று வருகிறார் விஜய் ஆண்டனி. தற்போது விஜய் ஆண்டனி 'அக்னி சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', 'மழை பிடிக்காத மனிதன்', 'வள்ளி மயில்' போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இசை, நடிப்பு மட்டுமல்லாமல் படத்தொகுப்பும் செய்து வருகிறார். மேலும் தான் நடித்து வரும் பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.