தமிழ் திரையுலகில் ஆகச்சிறந்த படைப்புகளை மக்கள் சார்ந்தும் மண் சார்ந்தும் தமிழ் மண்ணின் வாழ்வியலையும் ஒரு சேர இணைத்து பல அட்டகாசமான திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் இமையம் பாரதி ராஜா. கதைக்கு கதை புதுமை. நேர்த்தியான தொழில்நுட்பம் உணர்வு பூர்வமான நடிகர்கள் அழுத்தமான கதைக்கரு என்று 80கள் தொடங்கி பல படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை மறுமலர செய்தவர் இயக்குனர் பாரதி ராஜா. இயக்கத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் சிறந்து விளங்கி பல படங்களில் நடித்தும் வந்தார், மேலும் சமீப காலமாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக வலம் வருகிறார். அதன்படி குரங்கு பொம்மை, கென்னடி கிளப், நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன், ராக்கி ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். மேலும் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பாரதி ராஜா நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். மேலும் வாத்தி படத்தில் கவுர தோற்றத்திலும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது,

தற்போது இயக்குனர் பாரதி ராஜா ‘திருவின் குரல்’ மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடயே இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் அவரது கதையில் நடிகர் மனோஜ் பாரதி ராஜா இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்திலும் இயக்குனர் பாரதி ராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் அறிவிப்பிலிருந்தே மக்களிடம் தனி எதிர்பார்ப்பை கொண்டிருந்த படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டது. அதன்படி ‘மார்கழி திங்கள்’ என்று பெயரிடப்பட்ட படத்தின் முதல் பார்வையை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். காதலர்கள் நிழலில் பாரதி ராஜா வித்யாசமான தோற்றத்தில் நிற்கும் முதல் பார்வை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பாரதி ராஜா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்தின் கதை தனித்துவமானதாக இருந்து அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவு பேசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் பாரதி ராஜாவிற்கு இடையே ஒரு தனி மரியாதைக்குரிய உறவு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இருவருக்குமான அட்டகாசமான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து வாத்தி திரைப்படத்திலும் இந்த கூட்டணி ரசிகர்களின் கைத்தட்டல்களை பெற்றது குறிப்பிடதக்கது