திருமணம் ஆகாத விரக்தியில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மணலி எட்டியப்பன் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி, கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 5 மகள்கள் உள்ள நிலையில், அவர்களில் முதல் 3 பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில், 4 வது பெண் பிள்ளையான 22 வயதான ஐஸ்வர்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது திருமணம் விசயமாக, தந்தையிடம் பேசியதாகவும், அதன் பிறகு அவர் வேறு யாரிடமும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், கடந்த சில நாட்களாக கடும் மன உலைச்சலில் காணப்பட்ட ஐஸ்வர்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனக்கு இப்போது திருமணம் ஆகாது என்று தவறாக நினைத்துக்கொண்டதாகவும், திருமணம் ஆகாத விரக்தியிலேயே, அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே, திருமணம் ஆகாத விரக்தியில், இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.