டிக்டாக் காதல் மன்னன் கண்ணன் மீது பாய்கிறது குண்டர் சட்டம்!
By Aruvi | Galatta | 12:46 PM
டிக்டாக் காதல் மன்னன் கண்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள சேர்ந்தமரம் பகுதி, கே.பி.அருணாசலபுரத்தைச் சேர்ந்த 22 வயதான கண்ணன், டிக்டாக்கில் “காதல் மன்னன் கண்ணன்” என்ற பெயரில் வலம் வந்துள்ளான்.
டிக்டாக்கில் தினமும், சிரித்து சிரித்து வீடியோ வெளியிட்டு, அனைவரையும், தனது சிரிப்பால் வசிகரித்து, நிறையப் பெண்களுடன் அறிமுகமாகி உள்ளான்.
ஒரு கட்டத்தில், பள்ளி மாணவிகள் முதல் திருமணம் ஆன பெண்கள் வரை கண்ணனிடம் பழகி வந்துள்ளனர். ஆனால், அந்த பெண்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான்.
இதனால், பயந்துபோன பள்ளி மாணவி ஒருவரும், திருமணமாகி 2 குழந்தைகளுக்குத் தயாரான பெண் ஒருவரும், தென்காசி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கண்ணனை கைது செய்து அவனது செல்போனையும் பறிமுதல் செய்தனர். அதில், 50 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் பல குடும்ப பெண்களை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, அவர்களிடம் அடுத்தடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது.
இதனால், பதறிப்போன போலீசார், கண்ணனின் காதல் லீலைகள் பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, கண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, காதல் மன்னன் கண்ணன், தனது 17 வயதிலேயே போலீசார் பற்றி தவறாகப் பேசியதால், அப்போதே கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு, பின்னர் வெளியே வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், 8 ஆம் வகுப்பு கூட தாண்டாத கண்ணன், கட்டிட வேலைக்குச் சென்றாலும் டிப்டாபாக ஆடை அணிந்துகொண்டு, கல்லூரி மாணவன் போல் நடித்து பல பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி உள்ளான் என்றும், இவன் மீது வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 6 வது வழக்காக, பெண்களை ஆபாச வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியது பதிவாகி உள்ளது.
இதனால், டிக்டாக் காதல் மன்னன் கண்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, நெல்லை போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.