கள்ளக் காதலை கைவிட மறுத்ததால், கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து மனைவி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள புதன்சந்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதான கந்தசாமி,
கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு 40 வயதில் அங்கம்மாள் என்ற மனைவியும், 20 வயதில் சாந்தி என்ற மகளும் உள்ளனர்.

இதனிடையே, கட்டிட மேஸ்திரியாக பணியாற்றும் போது, கூட வேலை செய்த சரோஜா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த தகவல், கட்டிட மேஸ்திரி கந்தசாமியின் மனைவி அங்கம்மாளுக்கு தெரியவந்துள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த அங்கம்மாள், தனது கணவரை கண்டித்ததுள்ளார். அத்துடன், கள்ளக் காதலை கை விடும் படியும் வற்புறுத்தி உள்ளார்.

ஆனால், மனைவியைப் பொருட்படுத்தாத கந்தசாமி, கள்ளக் காதலை கைவிடாமல், மேலும் தொடர்ந்துள்ளார். அத்துடன், சரோஜாவுடன் தனியாகச் சேர்ந்த வாழ விரும்பி, மனைவி பெயரில் உள்ள சொத்து மற்றும் நகைகளைக் கேட்டுள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மனைவி அங்கமாள், தனது மகள் சாந்தி மற்றும் தனது தயார் 65 வயதான எல்லம்மாள் ஆகியோருடன் சேர்ந்து, கணவனை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, வீட்டின் வெளியே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமியை, அவரது மனைவி பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

இதில் தீ பற்றி எரிந்த நிலையில், அவர் வலியால் அலறி துடித்துள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கள்ளக் காதலை கைவிட மறுத்ததால், கணவனை பெட்ரோல் ஊற்றி மனைவியே எரித்துக் கொன்றது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கம்மாள், மகள் சாந்தி, தாயார் எல்லம்மாள் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கள்ளத்தொடர்பைக் கைவிட மறுத்த கணவரை, மனைவி - மகள் மற்றும் மாமியார் என குடும்பமே சேர்ந்து கொன்றது, அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.