“நடிகர் விஜய் வரி ஏய்ப்புச் செய்யவில்லை!” - ஐ.டி. அதிகாரிகள் தகவல்
By Aruvi | Galatta | 11:06 AM
“நடிகர் விஜய் வரி ஏய்ப்புச் செய்யவில்லை” என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“பிகில்” பட விவகாரத்தில் ஏற்கெனவே நடிகர் விஜய், பிகில் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட மொத்தம் 38 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த மாதம் சோதனை நடத்தியது தொடர்பாக, நேற்றைய தினம் சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 8 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, விஜய் வீட்டில் சில ஆவணங்களுக்கு சீல் வைக்கப்பட்டு அவற்றை வெளியே எடுக்க ஏற்கனவே தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்களை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன், மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், விஜய் வீட்டில் உள்ள அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
பல மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில், அனைத்து சரிபார்க்கப்பட்டன. இதனையடுத்து, “நடிகர் விஜய் பிகில் படத்திற்கு 50 கோடி ரூபாயும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாயும் ஊதியமாகப் பெற்றுள்ளதாகவும், இந்த 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளதாகவும்” வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.