மக்கள் நெருக்கம் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னையின் பொறுப்பு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “கொரோனா விவகாரத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் ‌கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டார்.

“தமிழகத்தில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான், தமிழகத்தில் அதிகளவில் சோதனை செய்து வருகிறோம்” என்றும் கூறினார்.

“தமிழகத்தில் வென்டிலேட்டர்களின் தேவை குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, வென்டிலேட்டர்கள் தொடர்பான ஸ்டாலினின் குற்றச்சாட்டுத் தவறானது” என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், “இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்றும், தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளதாகவும்” முதலமைச்சர் கூறினார்.

குறிப்பாக, “தமிழக ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்கப் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும்” அவர் தெரிவித்தார்.

அத்துடன், “தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும். அரசின் முயற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

“தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால், கொரோனாவை பற்றி பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றும் முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கைத் தெரிவித்தார்.