நடிகர் விஜய் வீட்டில் ஏற்கெனவே சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், தற்போது மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“பிகில்” பட விவகாரத்தில் ஏற்கெனவே நடிகர் விஜய், பிகில் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட மொத்தம் 38 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த மாதம் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

அப்போது, 77 கோடி ரூபாய் பணமும், பல்வேறு சொத்து தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. அத்துடன், நடிகர் விஜய் வீட்டில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, நடிகர் விஜய், தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. பின்னர், விஜயின் ஆடிட்டர் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும், அமலாக்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, விஜய் புதிதாக நடித்து வரும் “மாஸ்டர்” படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், “பிகில்” பட விவகாரத்தில் ஏற்கெனவே நடிகர் விஜய் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், தற்போது மீண்டும் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், “மாஸ்டர்” படத்திற்குக் கிடைத்த சம்பளம் தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.