வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மருமகளை, மாமியார் உயிருடன் கொழுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை அருகே உள்ள சூரியம்பட்டியைச் சேர்ந்த முருகானந்தத்திற்கும், அந்த பகுதியில் உள்ள பொட்டுவாச்சாவடி பகுதியைச் சேர்ந்த 20 வயதான சங்கீதாவுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே, மாமியார் புஷ்பவள்ளி மற்றும் அவருடைய குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சங்கீதாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. இது குறித்து, முருகானந்தம் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சங்கீதா கர்ப்பிணியான நிலையில், அப்போதும் மனமிறங்காத அவரது மாமியார் புஷ்பவள்ளி, தொடர்ந்து வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மருமகளைத் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனிடையே, வரதட்சணை கொடுமையின் உச்சபட்சமாக, கடந்த 4 ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணி சங்கீதாவின் வயிற்றுப்பகுதியில் மண்ணெண்ணெய்யை ஊற்றி அவரது மாமியார் புஷ்பவள்ளி தீ வைத்து எரித்துள்ளார்.

இதில், தீ கொழுந்துவிட்ட எரிந்த நிலையில், சங்கீதா அலறி துடித்துள்ளார். சங்கீதாவின் அலறும் சத்தம் கேட்டு, அவரது கணவர் மற்றும் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து சங்கீதாவை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சங்கீதாவுக்கு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்ட சங்கீதாவுக்கு, நேற்று அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், தற்போது தாயும், சேயும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வழங்குப் பதிவு செய்த போலீசார், சங்கீதாவிடம் வாக்குமூலம் வாங்கினர். பின்னர், வரதட்சணை கொடுமையின் கீழ் மாமியார் புஷ்பவள்ளியை செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, வரதட்சணை கேட்டு நிறைமாத கர்ப்பிணி உயிரோடு மாமியாரால் எரிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.