குழந்தைகளின் ஆபாச படத்தைப் பரப்பிய தொழிலதிபர் ஒருவரை போலீசார் கையும் களவுமாகக் கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதிலும் இந்தியாவில் தான் அதிகமானோர் பார்ப்பதாகும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புள்ளிவிவரங்கள் வெளியானது.

அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் தான் சிறுமிகளின் ஆபாசப்படத்தைப் பார்ப்பவர்கள் அதிகம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, ஆபாச படங்களைப் பார்ப்பவர்கள் மற்றும் பரப்புபவர்கள் மீது போலீசார் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.

அதன்படி, திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர், முதன் முதலாகக் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் ஒரு தொழிலதிபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த 49 வயதான சுமித் குமார் கல்ரா, உடற்பயிற்சி கூடத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை விற்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, குழந்தைகளின் ஆபாச படத்தை இணையத்தில் பார்த்துவிட்டு, சில நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் போலீசாருக்கு சிக்கியது.

இது தொடர்பாக ரகசியமாக விசாரணை மேற்கொண்ட போலீசார், டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை, தனிப்படை போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.