மர்ம நபர்களால் சுட்டுக்கொள்ளப்பட்ட சப்இன்ஸ்பெக்டர் வில்சனின் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

களியக்காவிளை அருகில் உள்ள படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் நேற்று இரவு காவல் உதவி ஆய்வாளர் 55 வயதான வில்சன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேரளாவிலிருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த மர்ம நபர் ஒருவர், அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கேரளாவை சேர்ந்த முகமது சமி, ஹெளசிக் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமது சமி, ஹெளசிக் ஆகிய இருவரும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக தற்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவினை சோதனை சாவடியில், எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியில், தமிழக டிஜிபி திரிபாதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, வில்சன் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்து, அவரது சொந்த ஊரான மார்த்தாண்டம் பகுதிக்குஎடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், போலீசார் அவருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வில்சன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதனிடையே, இது தொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக. உடனே கைது செய்ய தென்மண்டல ஐ.ஜி.க்குஉத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். அத்துடன், எஸ்.ஐ வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.