நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் 20 கோடி பேர்!
By Aruvi | Galatta | 11:23 AM
மத்திய அரசு கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமார் 20 கோடி பேர் பங்கேற்று வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய பொருளாதார கொள்கையைக் கண்டித்தும், அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தொழிற்சங்கங்கள் இன்று அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி, நாடு முழுவதும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிற்சங்கத்தினர், இன்று காலை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 20 கோடி அரசு ஊழியர்கள் பங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், வங்கி மற்றும் அரசு துறை சார்ந்த சேவைகள் இன்று முடங்கி உள்ளன. அத்துடன், அரசு அலுவலங்களில் செயல்படும் பொதுமக்கள் தொடர்பான பணிகளும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாடு தழுவிய இந்த போராட்டம் காரணமாக, பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணிகள் பாதிக்கப்படுவதோடு, அரசுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று மத்திய அரசு, ஊழியர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகம் - கேரளா எல்லையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.