முன்னாள் வீரர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சச்சின் 37 ரன்களும், ஷேவாக் 74 ரன்கள் எடுத்ததால், இந்திய ஜாம்பவான்கள் அணி வெற்றி பெற்றது.

சாலை பாதுகாப்பு குறித்து மும்பையில் விழிப்புணர்வு டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் இந்திய ஜாம்பவான்கள் அணி, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் அணியுடன் மோதியது.

கிரிக்கெட் போட்டியிலிருந்து ஒய்வு பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள், இந்த போட்டியில் பங்கேற்று விளையாடினர்.

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன், லாரா தலைமையில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் அணியினர் முதலில் பேட்டிங் செய்தனர்.

அதன்படி, 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு, 150 ரன்கள் சேர்த்தது. இதனால், 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ஜாம்பவான் அணியில், சச்சின் தெண்டுல்கர் 7 பவுண்டரியுடன் 36 ரன்களும், ஷேவாக் 11 பவுண்டரியுடன் 74 ரன்களும் சேர்த்தனர்.

சச்சின் தெண்டுல்கர் - ஷேவாக் விளையாடும் போது, ரசிகர்கள் உற்சாக மிகுதியால் எழுப்பிய சத்தம் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. இவர்கள் இருவரும் விளையாடியதைப் பார்க்கும்போது, பழைய அதிரடியான ஆட்ட நிகழ்வுகள், வெற்றி பூரிப்புகள் மட்டுமே நினைவுக்கு வந்தது.

அதேபோல், யுவராஜ் சிங் அடித்த இமாலய சிக்ஸருக்கு, ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரம், அரங்கையே அதிரச் செய்தது. அதேபோல், ஜாகிர் கான் பிடித்த அற்புதமான கேட்ச், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து, 18.2 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஜாம்பவான் அணி அபார வெற்றி பெற்றது.