விவாகரத்து பெற்றுப் பிரிந்து வாழ்ந்து வந்த ஹிருத்திக் ரோஷன் - சுசன்னே தம்பதியை, கொரோனா வைரஸ் சேர்ந்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், கடந்த 2000 ஆம் ஆண்டில் பேஷன் டிசைனிங் துறையைச் சேர்ந்த சுசன்னேவை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, இந்த தம்பதிக்கு 2 மகன்கள் பிறந்தனர்.

இதனிடையே, ஹிருத்திக் ரோஷன் - சுசன்னே இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதிகள் இருவரும் கடந்த 2013 ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு முறைப்படி விவாகரத்து கிடைத்தது. விவாகரத்து விதிமுறைப்படி, இவர்களுடைய இரு மகன்களும், நடிகர் ஹிருத்திக் ரோஷன் உடன் வசித்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இந்த உத்தரவால், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், ஹிருத்திக் ரோஷன் உடன் வசித்து வரும் தனது 2 குழந்தைகளும் தனிமையை உணரக் கூடாது என்ற எண்ணத்தில், ஹிருத்திக் ரோஷன் வீட்டுக்கு வந்த சுசன்னே, தனது 2 மகன்களுக்கு உதவியாகவும், துணையாகவும் இருக்க முடிவு செய்தார். அதன்படி, சுசன்னே, தனது 2 மகன்கள் மற்றும் கணவர் ஹிருத்திக் ரோஷன் உடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மனைவி சுசுன்னேவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பதிவிட்டு, சுசன்னே தன் வீட்டில் இருக்கும் புகைப்படத்தையும் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம், இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பல மனிதர்களின் உயிரை வாங்கி வரும் நிலையில், மனம் கசந்து விவகாரத்து பெற்ற பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் - சுசன்னே தம்பதியை, மீண்டும் சேர்த்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தான், கெட்டதிலும் ஒரு நல்லது போல?!