நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன்குமார் குப்தாவின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளான 32 வயதான முகேஷ் குமார் சிங், 31 வயதான அக்‌ஷய் குமார், 26 வயதான வினய் குமார் சர்மா, 25 வயதான பவன் குப்தா, ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவது தொடர்பாக கடந்த 2 முறை தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தூக்கில் போடுவது 2 முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, 4 பேரையும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட 3 வது முறையாக தேதி குறிக்கப்பட்டது.

ஆனால், நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதால், மறு உத்தரவு வரும் வரை 4 பேரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைப்பதாக டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவது, 3 வது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பவன் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்தார்.

இதன் காரணமாக, நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் விரைவில் தூக்கில் ஏற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.