இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் உயிரிழந்த வழக்கில், நடிகர் கமல்ஹாசன் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார். 

சென்னை நசரத்பேட்டையில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற “இந்தியன்-2” படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. 

Indian 2 accident kamal haasan interrogation

அப்போது, எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்ததில் உதவி இயக்குநர் உள்பட மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றினர்.

Indian 2 accident kamal haasan interrogation

இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, கடந்த வாரம் காவல் ஆணையர் விசுவநாதன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், இயக்குநர் ஷங்கரிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

Indian 2 accident kamal haasan interrogation

இந்நிலையில், கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று அவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

அப்போது, விபத்து நடந்தது தொடர்பாகவும், படப்பிடிப்பின்போது அங்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கமல்ஹாசனிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், விளக்கம் கேட்டுத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.