கும்பகோணம் பாலியல் பலாத்கார வழக்கில் அதிரடி திருப்பமாக 4 பேருக்கு “உயிரிழக்கும் வரை சிறை” தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, தமிழ்நாட்டிற்குப் பயிற்சிக்காக வந்த பெண் வங்கி ஊழியர் ஒருவர், நள்ளிரவில் ரயிலில் கும்பகோணம் வந்திறங்கி உள்ளார்.

அங்கிருந்து, தான் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த விடுதிக்குச் செல்வதற்காக, ஆட்டோவில் ஏறி உள்ளார். ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தி, அங்கிருந்து விடுதிக்குச் செல்லாமல், வேறொரு பகுதிக்குச் சென்றுள்ளார். இதை, அந்த பெண் கூகுள் மேப் மூலம் கண்டறிந்து, ஆட்டோவிலிருந்து திடீரென்று கீழே குதித்துள்ளார்.

இதனால், பயந்துபோன குருமூர்த்தி, அங்கிருந்து அப்படியே சென்றுவிட்ட நிலையில், அதே இடத்தில் தனியே நின்ற அந்த பெண்ணை, அந்த வழியாகக் கஞ்சா போதையில் வந்த தினேஷ், புருஷோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகியோர் அங்கிருந்து பலவந்தமாகத் தூக்கிச் சென்று, கதற கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், அந்த காமுகர்களின் பிடியிலிருந்து தப்பி வந்த அந்த பெண், அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குருமூர்த்தி உட்பட 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, கும்பகோணம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இளம் பெண்ணை போதையில் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்த தினேஷ், புருஷோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகிய 4 பேருக்கும், அவர்கள் இயற்கையாக உயிரிழக்கும் வரை சிறையில் அடைக்க நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் குற்றவாளிகள் தரப்பிலிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தமிழக அரசு சார்பிலும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.