நடிகர் பிரகாஷ்ராஜ், குமாரசாமி உள்பட 15 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, “தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக” முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பகிரங்கமாக வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், குமாரசாமி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சேத்தன், மடாதிபதி நிஜகுனநந்தா சுவாமி உள்பட 15 பேரை கொலை செய்வது தொடர்பாக, மர்ப நபர் ஒருவர் கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

அந்த கடிதத்தில் எந்த பெயரோ, அமைப்பின் பெயரோ இடம் பெறவில்லை. ஆனாலும், கர்நாடகா போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கடிதத்தில் உள்ள 15 பேருக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் அவர்கள் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் அவர்கள் அளித்த பேட்டிகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார். கர்நாடகாவில் 15 முக்கிய பிரபலங்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம், அம்மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.