குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பரப்பப்பட்டு வருவது குறித்து, சமூக வலைத்தளங்களுக்குத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியா முழுவதும் 40 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வழக்கத்தை விட அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும் ஐ.சி.பி.எஃப், (Indian Child protection Fund) வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டி இருந்தது.

அதாவது மார்ச் 24, 26 ஆகிய தேதிகளில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இணையத்தில் தேடப்பட்டுள்ளதாகவும், இது முன்பை விட 95 சதவீதம் கூடுதலாகத் தேடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்தியாவின் மிக முக்கியமான 100 நகரங்களைக் கண்காணித்ததில், சென்னை, புவசேஷ்வரில் அதிக அளவில், குழந்தைகளின் ஆபாச படங்கள் தேடி தேடி பார்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை, புவசேஷ்வருக்கு அடுத்தபடியாக டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஆகிய பெரு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பெரு நகரங்கள் இல்லாமல், 2 ஆம் கட்ட நகரங்களாக உள்ள ஆக்ரா, லக்னோ, சிம்லா, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களிலும், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் அதிக அளவில் பார்க்கப்பட்டுள்ளதாக

இது தொடர்பாகக் கூகுள், டிவிட்டர், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில், “ ஊரடங்கின்போது தான் குழந்தைகள் ஆபாசப் படங்கள் குறித்த தேடல் அதிகம் இருந்துள்ளது” என்று கூறியுள்ளது. மேலும், இந்த ஆபாசப் படங்கள் சமூக வலைத்தள இணைப்புகள் வழியாக, எளிதில் பரிமாறப்படுவதாகவும், இதனைக் களைய நிறுவனங்கள் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இது தொடர்பாக வரும் 30 ஆம் தேதிக்குள் கூகுள், டிவிட்டர், வாட்ஸ்ஆப் ஆகிய நிறுவனங்கள் பதிலளிக்கத் தேசிய குழந்தைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.