ஆண் பிள்ளை மோகத்தில், பெற்ற தாயே தனது 3 மாத பெண் பிள்ளையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள மூங்கில் பாளையத்தைச் சேர்ந்த குணசேகரன் - சங்கீதா தம்பதியினருக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனிடையே, இந்த தம்பதிக்கு ஏற்கனவே 9 வயதில் நிதர்சனா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், சங்கீதா மீண்டும் கரு உற்றார்.

இந்த முறை, ஆண் குழந்தை பிறக்கும் என்று குணசேகரன் - சங்கீதா தம்பதியினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக 2 வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால், கணவன் - மனைவி இடையே பிரச்சனை எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த நாட்களாக கடும் மன உளைச்சலில் காணப்பட்ட சங்கீதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

அதாவது, தன் மனதை கள்ளாக்கிக்கொண்டு, தன் வாழ்க்கை பற்றிய ஒரு முடிவையும் எடுத்துக்கொண்டு, பிறந்து 3 மாதங்கள் மட்டுமே ஆன தன்னுடைய பெண் குழந்தையை, வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்துள்ளார்.

இதில், குழந்தை துடிதுடித்து மூச்சு திணறி இறந்துள்ளது. குழந்தை இறந்ததும், பெற்ற கடனுக்கு அழுது தீர்த்த தாய் சங்கீதா, அவரும் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசா, உயிரிழந்த குழந்தை மற்றும் சங்கீதா ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரின் மரணம் குறித்து சங்கீதாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.