தன்னுடைய உதவியாளர் உயிரிழந்ததைப் பார்த்து, அமைச்சர் விஜயபாஸ்கர் கதறி அழுதது, காண்போரைக் கண்கலங்க வைத்துவிட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கரிடம், பவ் என்கிற வெங்கடேஷ், கடந்த 10 ஆண்டுகளாக உதவியாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை சென்றார். இதற்காக, புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லதிலிருந்து, திருச்சி விமான நிலையத்தில், அவருடைய பொலீரோ காரில் வந்து வழி அனுப்பி வைத்துவிட்டு, இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, அவர் வந்த காரை செல்வம் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். அந்த நேரத்தில், கார் வீர பெருமாள்பட்டி வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அந்த பகுதியில் சாலையில் ஓரத்தில் உள்ள புளியமரத்தில், திடீரென்று போய் மோதி உள்ளது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த வெங்கடேஷும், செல்வமும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இன்று காலை வெங்கடேசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு, கதறி அழுதார். இதனைப் பார்த்தவர்களில் கண்களில் கண்ணீர் வரவைத்தது.

மேலும், வெங்கடேசனின் இறுதி காரியங்களை, அவரது வீட்டார் மற்றும் அவரது உறவினர்களுடன் இருந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மேற்கொண்டார். பின்னர், செல்வம் வீட்டிற்குச் சென்று, அவரது உடலுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி செலுத்தினார்.