கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டபோது, தடுத்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அசோக் நகர் 83 வது தெருவைச் சேர்ந்த 27 வயதான வினோத்குமார், ஆன்லைன் மூலம் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், இவரது மனைவி ஜனனிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால், கோபமடைந்த ஜனனி கோபித்துக்கொண்டு, அடுத்த தெருவில் உள்ள தனது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இதனையடுத்து. மனைவியைச் சமாதானம் செய்ய கடந்த 27 ஆம் தேதி மனைவியின் வீட்டிற்கு வினோத்குமார் சென்றுள்ளார்.

அங்கு, மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களுக்கும் - வினோத்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இது மோதலாக மாறியது.

அப்போது, ஜனனியின் உறவினர் 58 வயதான மாரியப்பன், கணவன் - மனைவி இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். இதில், ஆத்திரமடைந்த வினோத்குமார், மாரியப்பனை கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், மாரியப்பன் மயங்கி கீழே விழுந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.